எல்லாம் நல்லா போகுதுனு சொல்லி முடிக்கல.. காயத்தால் விலகிய கலீல் அஹ்மத்.. CSKவில் மாற்று வீரர் யார்?
சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பது தெரிய வந்துள்ளது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியின் போது கலீல் அஹ்மத் காயம் காரணமாக ஓவரை முடிக்காமல் வெளியேறி இருந்தார். அந்த காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக கலீல் அஹ்மத் விலகுவது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பிய நிலையில், நாளை மறுநாள் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

இந்தப் போட்டியில் வென்றால் சிஎஸ்கே அணியால் எளிதாக பிளே ஆஃப் ரேஸில் இணைந்துவிட முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் காயம் காரணமாக விலகி இருக்கிறார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஓவரை முழுமையாக வீச முடியாமல் கலீல் அஹ்மத் வெளியேறினார்.
வேகப்பந்துவீச்சாளருக்கு இடுப்புக்கு கீழ் காயம் ஏற்பட்டால், அந்த சீசனில் சோலி முடிந்தது என்றே அர்த்தமாகும். கலீல் அஹ்மத்திற்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் பவுலிங் செய்வதற்கு முன் முழுமையாக ஜம்ப் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி விட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஏனென்றால் கடந்த போட்டியில் பவர் பிளேவிலேயே 3 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே கலீல் அஹ்மத் விட்டுக் கொடுத்திருந்தார். சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்த கலீல் அஹ்மத் காயத்தில் விலகி இருப்பது சிஎஸ்கே அணிக்கு புதிய பிரச்சனைகளை கொடுத்துள்ளது. இதனால் கலீல் அஹ்மத் இடத்தில் முகேஷ் சவுத்ரி அல்லது ராமகிருஷ்ணா கோஷ் விளையாட வாய்ப்புள்ளது.
ராமகிருஷ்ணா கோஷ் சையத் முஷ்டாக் அலி தொடரில் டெத் ஓவர்களை மிகச்சிறப்பாக வீசி இருந்தார். அதேபோல் கீழ் வரிசை பேட்டிங்கிலும் பெரிய சிக்சர்களை அடிக்க கூடியவர். மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசக் கூடிய பவுலர் என்பதால், ராமகிருஷ்ணா கோஷ் விளையாட வாய்ப்புகள் அதிகம் என்றே பார்க்கப்படுகிறது.
அதேபோல் கலீல் அஹ்மத் இடத்திற்கு மாற்று வீரராக யாரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்யும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே நேதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தோனி உள்ளிட்டோர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றனர். பிரெவிஸ் கூட 3 போட்டிகளில் ஓய்வில் இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் மருத்துவக் குழுவை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications