வா வா என் தேவதையே.. மகளை வரவேற்ற தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதி.. பெயர் என்ன பாருங்க!
மும்பை: ஆர்சிபி அணியின் ஆலோசகரும், பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் மற்றும் அவரின் மனைவி தீபிகா பல்லிக்கல் தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. முதலில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், இம்முறை மகள் பிறந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். ஆர்சிபி அணிக்காக 4 ஆண்டுகளாக விளையாடிய தினேஷ் கார்த்திக், பின்னர் ஓய்வை அறிவித்துவிட்டு அந்த அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

அவர் கட்டமைத்த அணியை ஏற்றுக் கொண்ட ஆர்சிபி அணி நிர்வாகம், முதல்முறையாக கோப்பையை வென்றது. அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த வர்ணனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஊடகங்களும் கூட தினேஷ் கார்த்திக்கை வர்ணனை செய்ய அழைக்கின்றன.
இதனால் கிரிக்கெட்டை விடவும் அதிக ஏற்றங்களை தினேஷ் கார்த்திக் கண்டு வருகிறார். தற்போது சொந்த வாழ்க்கையிலும் தினேஷ் கார்த்திக் சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் இருவரும் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இருவருக்கும் 2021ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இரு ஆண் குழந்தைகளுக்கும் கபிர் மற்றும் ஜியான் என்று பெயரிட்டனர். இதையடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிக்கல் குடும்பமாக சேர்ந்து பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த நிலையில் இந்த தம்பதி தங்களின் 3வது குழந்தையை வரவேற்றுள்ளனர்.
இம்முறை மகள் பிறந்துள்ள சூழலில், அந்த குழந்தைக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். இதனால் இந்த ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் உற்சாகமாக பணியாற்றுவார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications