IND vs ENG: பாவம்.. பும்ரா முதுகை உடைக்காம விட மாட்டாங்க போலயே.. ஒரே இன்னிங்ஸில் இத்தனை ஓவர்களா!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவை நம்பியே ஒட்டுமொத்த பவுலிங் படையும் களமிறங்கி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் இந்திய அணியின் பும்ரா காயம் அடைந்துவிடுவாரோ என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் டங்க் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ரன்களை குவித்தது.

ஷர்துல் தாக்கூர் எங்கே?
இதனால் 2ஆம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது. 2வது நாள் ஆட்டத்தின் போதே இந்திய அணி 3 கேட்ச்களை கோட்டைவிட்டது. இன்னொரு பக்கம் பும்ரா வீசிய நோ-பாலில் ஹாரி ப்ரூக் விக்கெட் எடுக்கப்பட்டது. அதேபோல் சுப்மன் கில்லும் 35 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர் அட்டாக்கில் கொண்டு வரவே இல்லை.
ஒரே நாளில் 13 ஓவர்கள்
17வது ஓவரிலேயே ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்த சுப்மன் கில், ஏன் ஷர்துல் தாக்கூரை அட்டாக்கில் கொண்டு வர தாமதம் செய்தார் என்று புரியவில்லை. அதேபோல் இந்திய அணி வீசிய 49 ஓவர்களிலேயே பும்ரா 13 ஓவர்களை வீசி இருந்தார். முழுக்க முழுக்க இந்திய அணி பவுலிங் பும்ராவை மட்டுமே நம்பி இருந்தது.
சச்சின் - பும்ரா
1990களில் சச்சின் டெண்டுல்கர் எப்படி தனியாக போராடுவாரோ, அதேபோல் பும்ரா தனியாக இங்கிலாந்து மண்ணில் போராடி கொண்டு இருந்தார். இங்கிலாந்து அணி கோட்டைவிட்ட 3 விக்கெட்டுகளும் பும்ரா வீழ்த்தியது தான். இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்திலும் பும்ரா உடனடியாக அட்டாக்கில் வந்தார். பிட்சில் எந்த உதவியும் இல்லாத போது, பந்து கொஞ்சம் கூட ஸ்விங்காகவில்லை.
எச்சரிக்கை அவசியம்
ஒரு கட்டத்தில் பும்ரா தொடர்ச்சியாக 5 ஓவர்களை வீச, மறுமுனையில் பவுலிங் செய்த பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக் கொடுத்து கொண்டே இருந்தார். இதனால் 17 ஓவர்களை வரை பும்ரா வீசிய நிலையில், ஒரு கட்டத்தில் ஓய்வெடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். ஒரே இன்னிங்ஸில் பும்ரா 25 ஓவர்களுக்கு மேல் பவுலிங் செய்தால், அடுத்த போட்டியில் விளையாடுவதே கடினமான விஷயமாகிவிடும்.
அடுத்தது என்ன?
இதனால் பும்ராவுக்கு ஆதரவாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் பங்களிப்பு செய்ய வேண்டும். இல்லையென்றால், பும்ரா 2வது போட்டியுடன் காயம் அடைந்து சொந்த ஊர் புறப்படுவது நிச்சயமாகிவிடும். பும்ரா இல்லாமல் வெளிநாடுகளில் இந்திய அணியால் என்ன செய்ய முடியும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.












Click it and Unblock the Notifications