சிராஜ்க்கு நேர்ந்த அவமானம்.. கம்பீரின் ஆதரவால் நிகழ்ந்த மாற்றம்.. சுப்மன் கில் இப்படி செய்யலாமா!
இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். வழக்கமாக இந்திய அணியின் புதிய பந்தை வீசக்கூடிய பவுலராக சிராஜ் இருந்து வந்த சூழலில், இன்று 8வது ஓவரில் தான் முதல் ஓவரையே வீசி இருக்கிறார். இது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணியே ஒருநாள் தொடரை கைப்பற்றும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணா பெஞ்ச் செய்யப்பட்டு, அர்ஷ்தீப் சிங் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ஹென்ரி நிக்கோல்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 2வது ஓவரை வீசுவதற்கு முகமது சிராஜ் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஹர்சித் ராணா கொண்டு வரப்பட்டார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே கான்வே 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து முகமது சிராஜ் எப்போது அட்டாக்கில் கொண்டு வரப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சுப்மன் கில் அவரை 8வது ஓவரில் தான் அட்டாக்கில் கொண்டு வந்தார். இதனால் முகமது சிராஜ் அவமானப்படுத்தப்பட்டதாக விவாதங்கள் எழுந்துள்ளது.
ஏனென்றால் அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் ஸ்விங் இருப்பதால், அவர் பவர் பிளே ஓவர்களிலும் நியூ பாலிலும் பவுலிங் செய்வது வழக்கம் தான். ஆனால் ஹர்சித் ராணா புதிய பந்தில் பெரிதாக ஸ்விங் செய்பவர் அல்ல. அதிலும் முகமது சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்யக் கூடியவர். இதற்கு முன் ஏராளமான போட்டிகளில் புதிய பந்தில் சிராஜ் செய்த மேஜிக் ஏராளம்.
இதனால் கம்பீரின் ஆதரவு காரணமாக ஹர்சித் ராணாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்டோரை கடந்து ஹர்சித் ராணாவுக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கம்பீர் வேண்டுமென்றே முகமது சிராஜை ஓரம்கட்டுவதாக விவாதம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications