பதிரானாவுக்கு அந்த பிரச்சனை இருக்கு.. சமாளிக்க ரச்சின் கட்டாயம் தேவை.. சிஎஸ்கேவின் வீக்னஸ் அது!
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் விளையாடினாலும், அடுத்த நாளில் சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கப்பட்டு சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்கவுள்ளதால், சென்னை அணி வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சிஎஸ்கே அணியின் பவுலிங்கில் சிரமம் இருந்தது. அதனை இம்முறை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்திலேயே சரி செய்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹ்மத், சாம் கரண், ஜேமி ஓவர்டன், நேதன் எல்லீஸ், கலீல் அஹ்மத், அன்சும் கம்போஜ் திறமையான வீரர்களை வாங்கியுள்ளனர்.

சிஎஸ்கே ஸ்பின்னர்கள்
அதிலும் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின், ஜடேஜா, நூர் அஹ்மத் பவுலிங்கை எதிர்கொள்வதை நினைத்தாலே எதிரணிகள் பதறிவிடுவார்கள். கட்டாந்தரை பிட்சில் கூட நூர் அஹ்மத் மிகச்சிறப்பாக பவுலிங் செய்யக் கூடியவர். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாட 7 போட்டிகளிலும் நிச்சயம் நூர் அஹ்மத் பிளேயிங் லெவனில் இருப்பார்.
சிஎஸ்கே பேட்டிங் வரிசை
ஆனால் பேட்டிங்கில் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. ஏனென்றால் தொடக்க வீரர்களான கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிதானமாக ஆடி அதிரடிக்கு திரும்ப கூடியவர்கள். நம்பர் 3ல் ஆடவுள்ள ராகுல் திரிப்பாட்டி, நம்பர் 4ல் வரும் தீபக் ஹூடா, நம்பர் 5ல் சிவம் துபே ஆகியோர் இருக்கின்றனர். இதில் சிவம் துபேவை தவிர்த்து வேறு யாரும் முதல் பந்திலேயே அட்டாக் செய்யக் கூடிய பேட்ஸ்மேன்கள் அல்ல.
170 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் பேட்ஸ்மேன்கள்
மற்ற அணிகளில் கிளாசன், நிக்கோலஸ் பூரன், லிவிங்ஸ்டன், ஹர்திக் பாண்டியா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸல், ராகுல் டிவாட்டியா உள்ளிட்டோர் முதல் பந்தில் இருந்தே 170 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக் கூடிய பேட்ஸ்மேன்கள். இவர்கள் இல்லையென்றால் அந்த பணியை செய்வதற்கு மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியில் சிவம் துபே விக்கெட்டை வீழ்த்தினால், ஸ்கோர் 160 ரன்களை கடப்பதே சிரமம்.
ரச்சின் ரவீந்திரா அவசியம் ஏன்?
இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் ரச்சின் ரவீந்திராவை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் ரச்சின் ரவீந்திரா களமிறங்கிய உடன் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதோடு, சூழலுக்கு ஏற்ப நிதானமாகவும் ரன்களை சேர்க்க கூடியவர். ஆனால் இவரை பிளேயிங் லெவனில் சேர்த்தால் சாம் கரணை பெஞ்ச் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
4 வெளிநாட்டு வீரர்கள்
ஆனால் டாப் ஆர்டரில் 170 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் கட்டாயம் என்பதால், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ரச்சின் ரவீந்திரா இருக்க வேண்டும். இதனால் 4 வெளிநாட்டு வீரர்களில் கான்வே, ரச்சின் ரவீந்திரா, நூர் அஹ்மத் மற்றும் பதிரானா ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிரானா சந்தேகம்
அதேபோல் கடந்த சில மாதங்களாக பதிரானாவின் யார்க்கர் பந்து அதன் சிறப்பை இழந்து வருகிறது. அவர் பவுலிங் ஆக்ஷன் மாற்றப்பட்டதில் இருந்து சரியான லைன் மற்றும் லெந்தில் பிட்ச் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறார். பயிற்சியின் பதிரானாவின் பவுலிங் ஆக்ஷன் மீண்டும் பழைய நிலைக்கு வந்திருந்தாலும், அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதும் சந்தேகம்தான். இதனால் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக 14 போட்டிகளிலும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications