ஆஹா பாயிண்டை பிடிச்சிட்டாங்களே.. உலகக் கோப்பை பைனலை குஜராத்தில் நடத்தியது ஏன்? விட்டு விளாசிய மம்தா
சென்னை: கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றிருக்கும். ஆனால் இவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தினார்கள், என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியாவின் சிறப்பான உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது.
ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களை 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது.
விமர்சனம்; இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது ஆனால் சில "பாவிகள் " கலந்து கொண்ட போட்டியைத் தவிர மற்ற எல்லா போட்டியிலும் வென்றது. இந்திய அணியை காவி மயமாக்கும் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
காவி உடையில் இந்திய வீரர்கள் ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை வீரர்கள் எதிர்த்தனர், எனவே இந்திய அணி போட்டிகளின் போது காவி ஜெர்சி அணியவில்லை. இல்லையென்றால் அவர்கள் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும்.
( எல்லாம் ஓவர்.. உலகக் கோப்பை முடிஞ்சதும் கோலி, ரோஹித்திற்கு பிசிசிஐ அனுப்பிய மெசேஜ்.. அவ்வளவுதானா?)
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியிலேயே இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. காரணம் முதல் போட்டியிலேயே மிக மிக குறைவான மக்கள்தான் மேட்சை பார்க்க வந்தனர்.
வெறும் 5 ஆயிரம் பேர் கூட ஆட்டத்தை பார்க்க வரவில்லை. பொதுவாக குஜராத் மக்கள் பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்கள் கிடையாது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லிவாசிகள் போல தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள் இல்லை. இதனால் அகமதாபாத் ரசிகர்கள் மிக குறைவான அளவில் ஆட்டத்திற்கு வந்தது விமர்சனங்களை சந்தித்தது.
பாகிஸ்தான் ஆட்டம்: அதேபோல் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர்.
அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.
முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அகமதாபாத் ரசிகர்களின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
அகமதாபாத் மைதானம்: இந்த நிலையில்தான் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை அகமதாபாத் மைதானத்தில் நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம், பெரிய மைதானம் என்ற காரணத்திற்காக இந்த ஆட்டம் நடத்தப்பட்டு இருக்கலாம்.

ஆனால் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு அதிக அனுபவம் உள்ளது. இங்கே பல போட்டிகளை ஆடி உள்ளனர். ரோஹித் தொடங்கி பல வீரர்கள் இங்கே அதிகம் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். ரோஹித், ஷ்ரேயாஸ், சூர்ய குமார், பும்ரா ஆகியோர் கூட இங்கே அதிகம் ஆடிய அனுபவம் கொண்டவர்கள்.
அப்படி இருக்க அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தும் முடிவை யார் எடுத்தது. இந்த பிட்ச் பெரிய பிரபலமான பிட்ச் கிடையாது , அதேபோல் இங்கே ஆட்டத்தை நடத்துவது இந்திய அணிக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. இருந்தாலும் "வேறு சில காரணங்களுக்காக" இங்கே ஆட்டத்தை நடத்தியது ஏன் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றிருக்கும். ஆனால் இவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தினார்கள். அதனால்தான் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications