ஆர்சிபி அணியில் இருக்கும் ஒரு பிரச்சனை.. சஞ்சு சாம்சனிடம் தோற்பது உறுதி.. காரணமே இதுதான்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சொந்த மண்ணில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ஆர்சிபி அணி, இம்முறை ஜெய்ப்பூரில் மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகமாக இருந்தாலும், ஆர்சிபி அணியின் பவுலிங் அட்டாக் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்க உள்ளது. ராஜஸ்தான் அணியின் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால், அந்த அணி உற்சாகமாக இருக்கிறது. அதேபோல் ஆர்சிபி அணி இந்த சீசனில் வென்ற 3 போட்டிகளும் அந்நிய மண்ணில் வென்றவை என்பதால், எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் ஆடிய போட்டிகளில் ஆர்சிபி அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 14 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் அணியின் கைகளே ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜெய்ப்பூர் மைதானத்தின் பிட்சில் ஸ்பின்னர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும்.
கடந்த சில சீசன்களில் அஸ்வின் மற்றும் சாஹலை வைத்து அந்த அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது. அதற்கேற்றபடி இந்த சீசனில் ஹசரங்கா, தீக்சனா மற்றும் குமார் கார்த்திகேயா ஆகிய 3 நல்ல ஸ்பின்னர்களை கொண்டுள்ளது. ஹசரங்கா ரன்களை விட்டுக் கொடுத்தாலும், நிச்சயம் விக்கெட்டை வீழ்த்திவிடுவார். ஆனால் ஆர்சிபி அணியில் சுயாஷ் சர்மா மட்டுமே முழு நேர ஸ்பின்னராக இருக்கிறார்.
க்ருணால் பாண்டியா, லிவிங்ஸ்டன் ஆகியோர் ஸ்பின்னர்களாக பவுலிங் செய்தாலும், விக்கெட் டேக்கரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த போட்டியிலேயே விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவிடம் ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்னும் சொல்லப் போனால், ஆர்சிபி பேட்ஸ்மேன்களின் சிக்கல் வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்தது.
அதேபோல் ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா இருவரும் ஃபார்முக்கு வந்திருப்பதால், ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டுமென்றால் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பில் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதர் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டாலே, ஆர்சிபி அணியை சிறிய இலக்கில் கட்டுப்படுத்த முடியும். அதனால் அந்த திட்டத்திற்கு ஆர்சிபி அணி இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications