ராஜஸ்தான் அணியில் இருந்து விலகுகிறேனா.. சர்ச்சைகளுக்கு மத்தியில் சஞ்சு சாம்சன் கொடுத்த விளக்கம்!
சென்னை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சிஎஸ்கே அல்லது கேகேஆர் அணிக்கு டிரேட் செல்ல முடிவு எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியது. இந்த சூழலில் அஸ்வின் உடனான உரையாடலில், ராஜஸ்தான் அணிதான் தனக்கு வாழ்க்கை கொடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான பணிகளை அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே மற்ற அணிகளில் இருந்து தேவையான வீரர்களை வாங்குவதற்கான டிரேட் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வேறு அணிக்கு மாறப் போவதாகத் தகவல் வெளியாகியது.

ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சஞ்சு சாம்சன் இந்த முடிவினை எடுத்துள்ளார். அதனால் தன்னை வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டும் அல்லது ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் ஆர்வமாக இருக்கின்றன.
கடந்த ஐபிஎல் சீசனின் போதே சஞ்சு சாம்சன், ரியான் பராக் மற்றும் ராஜஸ்தான் உரிமையாளர் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் விலகும் முடிவில் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு, அஸ்வின் உடனான உரையாடல் மூலமாக சஞ்சு சாம்சன் பதில் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் அணி குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், ராஜஸ்தான் அணி எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியம். கேரளாவில் இருந்து ஒரு சிறிய பையன், தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தான். அப்போது ராகுல் டிராவிட் சாரும், மனோஜ் சாரும் எனக்குத் தேவையான வாய்ப்பை நம்பிக்கையுடன் அமைத்துக் கொடுத்தார்கள். இந்த உலகத்திற்குத் தெரியும் முன், எனது திறமையை அடையாளம் கண்டனர்.
கண்களை மூடிக் கொண்டு என்னை நம்பினார்கள். ராஜஸ்தான் அணியுடனான இத்தனை ஆண்டுக் கால பயணம் அற்புதமாக அமைந்தது. அதற்காக ராஜஸ்தான் அணிக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சன் விலகும் முடிவை உண்மையாகவே எடுத்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணியிடம் தற்போதைய சூழலில் சஞ்சு சாம்சனுக்கு ரூ.18 கோடி கொடுத்து வாங்கும் அளவிற்கு கைவசம் பணம் இல்லை. இதனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications