அசத்திய சின்னவர்.. அர்ஜுன் டெண்டுல்கருக்கு முன்பே வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.. லக்னோ செய்த தவறு!
லக்னோ: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். 4 ஓவர்களை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 36 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். கடந்த சீசனை விடவும் அர்ஜுன் டெண்டுல்கர் நன்றாக முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. ஜோஷ் இங்லிஸ் மட்டும் 44 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். இதன்பின் பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பாக ஆடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 69 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை விடவும் லக்னோ அணிக்காக களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கரின் பவுலிங் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மும்பை அணியில் இருந்து லக்னோ அணிக்கு டிரேட் செய்யப்பட்டவர் அர்ஜுன் டெண்டுல்கர். இந்த சீசனில் லக்னோ அணிக்காக முதல்முறையாக களமிறங்கினார். 7வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அந்த ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் கொடுத்த கேட்ச்சை ரிஷப் பண்ட் கோட்டைவிட்டார்.
அந்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தில் லக்னோ அணியின் கைகள் ஓங்கி இருக்கும். இதன்பின் 9வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 15 ரன்களை விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து 15வது ஓவரின் போது அர்ஜுன் டெண்டுல்கர் மீண்டும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், பிரப்சிம்ரன் சிங்கிற்கு வீசிய ஸ்லோயர் யார்க்கர் மிரள வைத்தது.
அந்த பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் 17வது ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கரின் ரன் அப் மற்றும் வேகம் நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இதனால் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த சீசனில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications