இஷான் கிஷன் காட்டில் மழைதான்.. தொட்டதெல்லாம் தூள் பறக்குது.. காவ்யா மாறன் பாராட்டு!
ஐதராபாத்: கடந்த சில மாதங்களாகவே இளம் வீரர் இஷான் கிஷன் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறி வருவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது தொடங்கி ஐதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது வரை இஷான் கிஷனின் ஏற்றம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 135 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் நின்றார்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த சீசனில் ஐதராபாத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். இதன் மூலமாக ஐதராபாத் அணி 7 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சொந்த மண்ணில் ஆடிய 4 போட்டிகளில் 3ல் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இஷான் கிஷன் மாறியுள்ளார். பவுலிங்கில் ஹர்சல் படேல், உனாத்கட், ஜீசன் அன்சாரி உள்ளிட்ட வீரர்களை பெஞ்சிற்கு அனுப்பிவிட்டு, பிரஃபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன், இஷான் மலிங்கா, ஷிவாங் குமார் உள்ளிட்டோரை கொண்டு வந்தார்.
அது ஐதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் பவுலர்களின் திட்டத்தை சுதந்திரமாக செயல்படுத்த அனுமதிக்கிறார். களத்தில் ஃபீல்டிங் மாற்றங்கள் மற்றும் பவுலிங் மாற்றங்கள் இஷான் கிஷன் எந்த தவறுகளையும் செய்வதில்லை. ஐதராபாத் மைதானத்திற்கு ஏற்ப பவுலிங்கை அட்டாக்கை சரியாக உருவாக்கி வைத்துவிட்டார்.
இதனால் ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் தேவையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அடுத்த போட்டியில் பேட் கம்மின்ஸ் எந்த வீரரின் இடத்தில் களமிறங்குவார் என்பதே மிகப்பெரிய கேள்வியாகும். அதேபோல் ஒரு கேப்டனாக பேட் கம்மின்ஸ்க்கு எந்த தலைவலியும் கிடையாது. கடந்த 6 மாதங்களில் இஷான் கிஷன் தொட்டதெல்லாம் தங்கமாக மாறி வருகிறது.
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இருந்து முதல்முறையாக கோப்பையை வென்றார். திடீரென இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலை வந்த போது, நியூசிலாந்து தொடரில் பட்டையை கிளப்பினார். இதனால் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறினார்.
ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ்க்கு காயம் காரணமாக விளையாட முடியாத போது, இஷான் கிஷன் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், அடுத்தடுத்து இஷான் கிஷன் களத்தில் காட்டிய முதிர்ச்சி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications