கெய்ல், வார்னரால் கூட செய்ய முடியாத சாதனை.. பவர்பிளேயில் 500 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!
சண்டிகர்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் மட்டும் 500க்கும் அதிக ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 96 ரன்களை விளாசினார்.

இந்த ஐபிஎல் சீசனில் 3வது முறையாக வைபவ் சூர்யவன்ஷி சதம் அடிக்கும் சான்ஸை தவறவிட்டுள்ளார். இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எவரும் படைக்காத ஒரு அசாத்திய உலக சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில், ஒரே ஒரு ஐபிஎல் சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் மட்டுமே 500 ரன்களை விளாசிய முதல் பேட்டர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். டி20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் போன்றவர்களால் கூட எட்ட முடியாத இலக்கை அடித்து நொறுக்கியுள்ளார்.
இந்த முக்கிய நாக்-அவுட் போட்டியிலும் அதிரடி காட்டியதன் மூலம், ஐபிஎல் தொடரில் 21 இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 1,000 ரன்களையும் கடந்துள்ளார். இதன் மூலமாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற மற்றொரு மகுடத்தையும் தனது தலையில் வைபவ் சூர்யவன்ஷி சூடியுள்ளார். வெறும் 440 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி 1,000 ரன்களை குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதி வேகமாக 1,000 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கிறார். இந்த சீசனில் 16 இன்னிங்ஸில் ஆடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 72 சிக்ஸ், 63 பவுண்டரி உட்பட 776 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications