சச்சின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.. வைபவ் சூர்யவன்ஷிக்கு நடந்தது சாதாரணம்! பதானுக்கு பதிலடி
மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்துவதற்காகக் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் கையாண்ட 'பாடி லைன்' யுத்தி, தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரைச் சாதாரண பந்துகளால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த குஜராத் வேகப்பந்து வீச்சாளர்கள், வைபவ்வின் உடலை குறிவைத்து வீசும் 'பாடி லைன்' உத்தியைக் கையாண்டனர்.

போட்டியின் 14-வது ஓவரில், உலகின் அதிவேக பந்துவீச்சாளரான ககிசோ ரபாடா சுமார் 153 கி.மீ வேகத்தில் வீசிய ஒரு கடுமையான பவுன்சர் பந்து, வைபவ்வின் ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியது. இதில் நிலைகுலைந்து போன அவருக்கு உடனடியாக மைதானத்தில் 'கன்கஷன்' பரிசோதனை செய்யப்பட்டது.
ஹெல்மெட்டில் அடிவாங்கிய அடுத்த ஓவரிலேயே, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜும் வைபவ்வின் உடலையே குறிவைத்துத் தொடர்ந்து ஷார்ட்-பிட்ச் பந்துகளை வீசினார். ஆனால் எதற்கும் அஞ்சாத வைபவ், சிராஜின் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டுப் பதிலடி கொடுத்தார். இப்போட்டியில் அவர் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.
போட்டி முடிந்த பிறகு இந்த விவகாரம் குறித்துப் பதிவிட்ட இர்பான் பதான், "15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியைத் தடுப்பதற்காக இப்படியா உடம்பைக் குறிவைத்து 'பாடி லைன்' அட்டாக் செய்வது.. அது எனக்குச் சரியாகப்படவில்லை. அவர் பெரிய வீரர்களுடன் போட்டி போடுகிறார் என்பது உண்மைதான், ஆனால் எனக்குள் இருக்கும் 'தந்தை' இதனை ஏற்க மறுக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
இர்பான் பதானின் இந்த எமோஷனல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் அவரோடு கடுமையாக முரண்பட்டு விவாதித்து வருகின்றனர். "இது சர்வதேச தரம் வாய்ந்த ஐபிஎல் நாக்-அவுட் போட்டி, தெருக் கிரிக்கெட் அல்ல. 15 வயதிலேயே ஜஸ்பிரித் பும்ரா, ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை வைபவ் அடித்து நொறுக்கும் போது, பந்துவீச்சாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ள விதிகளைப் பயன்படுத்தி பவுன்சர் வீசுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
16 வயதில் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியபோது வக்கார் யூனிஸ் வீசிய பந்தில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடினார். ஒரு ஜாம்பவானாக உருவாக வேண்டும் என்றால் இதுபோன்ற அக்னிப் பரீட்சைகளை வைபவ் சந்தித்துதான் ஆக வேண்டும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications