டைம் டிராவல் பண்ணி 2016க்கு போவோமா.. இதுதான்டா விண்டேஜ் விராட் கோலி.. 84வது சதம் விளாசிய கிங்!
ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 90 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 53வது சதம் இதுவாகும். அதேபோல் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து விராட் கோலி அடித்துள்ள 84வது சதமாகும். இதனால் விண்டேஜ் விராட் கோலியை பார்த்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், விராட் கோலி களம் புகுந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி, பவுண்டரிகளாகவும், 2 ரன்களாகவும் எடுத்து வந்தார். அவருக்கு ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த கம்பெனியை கொடுத்தார்.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 47 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் சிறிது நேரம் நிதானமாக ஆடினார். அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் 90 ரன்களை எட்டிய போது, அழுத்தத்தை தன்பக்கம் எடுத்து கொண்டு விராட் கோலி அதிரடியாக ரன்களை சேர்த்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் Running between the wickets அற்புதமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் இருவருமே கிளாசிக் ஒருநாள் கிரிக்கெட்டை ஆடினார்கள். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 90 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதையடுத்து அதிரடியாக விளையாட முயன்ற விராட் கோலி 93 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 53வது சதம் இதுவாகும்.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 84வது சதமாக இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி மீண்டும் அற்புதமான ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் கடைசி 3 ஆட்டங்களில் 2 சதங்கள், ஒரு அரைசதத்தை விராட் கோலி விளாசி இருக்கிறார். இதனால் விராட் கோலி விண்டேஜ் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி இப்படி சதமடிப்பது 10வது முறையாகும். 10 முறை தொடர்ந்து 2 சதங்களை வேறு எந்த வீரரும் அடித்ததில்லை. இதன் மூலமாக விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். இதனால் 2027 உலகக்கோப்பை தொடர் வரை விராட் கோலி விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications