வாயில் இருந்து வந்த புகை.. இ-சிகரெட் புகைத்த கிளைன் மேக்ஸ்வெல்.. பரவும் வீடியோவால் வெடித்த சர்ச்சை
சென்னை: உலககோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதற்கிடையே போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கிளைன் மேக்ஸ்வெல் டிரஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. உலககோப்பை போட்டியை எப்போதும் வெற்றியுடன் தொடங்கும் ஆஸ்திரேலியா அணி இந்த முறை முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

கடந்த 8 ம் தேதி சென்னையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 199 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆன நிலையில் இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதன்பிறகு கடந்த 12ம் தேதி லக்னோவில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. இதில் 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
Well Smoked Maxwell 🫡 #AUSvsSA #Cricket pic.twitter.com/dQFeCjrLfQ
— Ankur (@ankurumm) October 12, 2023
இந்த 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அதோடு தற்போது வரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருவர் கூட அரைசதத்தை கடக்கவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கிளைன் மேக்ஸ்வெல் 17 பந்துகள் பிடித்து 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்த போட்டியின்போது டிரஸ்ஸிங் ரூமில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கிளைன் மேக்ஸ்வெல் இ-சிகரெட் பிடித்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. மேலும் அவர் இ-சிகரெட் பிடித்து புகையை வெளியே விடுவது போன்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவின் ஜெர்சி அணிந்துள்ளார். அவர் தனது கையில் இ-சிகரெட்டை மறைத்து வைத்து வாயில் வைத்து புகையை வெளியிடும் வகையில் வீடியோ உள்ளது.
இந்த வீடியோவுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிகரெட் என்பது போதைப்பழக்கமாகும். உடல் நலத்துக்கு தீங்கை ஏற்படுத்துவதோடு பக்கத்தில் இருப்பவருக்கும் பிரச்சனையை உருவாக்கும். இதனால் தான் இந்தியாவில் சிகரெட்டை தடை செய்ய வேண்டும் என ஆண்டுகளாக கோரிக்கைகள் உள்ளன. குறிப்பாக இ-சிகரெட் பயன்பாடு என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இந்தியாவில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் மேக்ஸ்வெல் இ-சிகரெட்டை புகைத்ததாக வீடியோ வெளியாகி உள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக மேக்ஸ்வெல் மற்றும் ஆஸ்திரேலிய அணி தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில் தான் கிரிக்கெட் போட்டிகளின்போது இதுபோன்ற விஷயங்களை வீரர்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஐசிசி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இதுதொடர்பாக வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதோடு இதுபோன்ற செயல்கள் தொடரும் பட்சத்தில் குறிப்பிட்ட வீரர்களின் ரசிகர்களும் அதனை பின்பற்ற தொடங்கலாம். இதனால் ஐசிசி இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications