சக வீரர்களுடன் தங்க தடை.. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு தனி அறை ஒதுக்கும் இங்கிலாந்து.. பின்னணி!
மும்பை: இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகம் சார்பில் தனி ஓய்வறை ஒதுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி, அங்குள்ள மைதானங்களில் சக இந்திய வீரர்களுடன் இணைந்து ஒரே ஓய்வறையைப் பயன்படுத்த இங்கிலாந்து சட்டங்களின்படி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்று மைதான வளாகத்தில் தனியாக ஒரு பாதுகாப்பான ஓய்வறை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் வழக்கமான ஓய்வறையையே பயன்படுத்துவார்கள். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி அந்த அறையில் இருக்க அனுமதி கிடையாது. டீம் மீட்டிங்கின் போது மட்டுமே வைபவ் சூர்யவன்ஷி சக வீரர்களின் ஓய்வறைக்கு செல்ல முடியும். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் தெரிந்தவுடன், இந்திய ரசிகர்களிடையே இது ஏதேனும் பாகுபாடா அல்லது ஒதுக்குதலா என்ற விவாதங்கள் எழுந்தன.
ஆனால், இதன் பின்னணியில் பிரிட்டன் நாட்டின் கடுமையான குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் விளக்கியுள்ளன. பிரிட்டன் நாட்டின் சட்டப்படி, 16 வயதுக்குட்பட்ட மைனர் குழந்தைகள் அல்லது வளரிளம் பருவத்தினர், தங்களை விட வயது மூத்தவர்களுடன் ஒரே ஓய்வறையையோ அல்லது குளியலறையையோ பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற கடுமையான விதிமுறை உள்ளது.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் 20 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தான். இதனால் வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியின் பாதுகாப்பைக் கருதி, பிரிட்டிஷ் சட்டதிட்டங்களின்படி இந்தத் தனி அறை ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷிக்கு உறுதுணையாக இந்திய அணி நிர்வாகிகளை அந்த அறையில் இருக்க வைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வைபவ் சூர்யவன்ஷியுடன் பயணிக்க அவரின் பெற்றோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications