சிக்கலில் சுப்மன் கில்.. இந்திய அணியின் கேப்டனாக முயற்சிக்கும் ஜெய்ஸ்வால்.. ராஜஸ்தான் கொடுத்த சான்ஸ்
ஜெய்ப்பூர்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட்டுள்ளார். ரியான் பராக் காயம் காரணமாக விலகியதால், அந்த பொறுப்பு ஜெய்ஸ்வால் வசம் வந்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணிக்காக அடுத்த கேப்டன் ரேஸிலும் ஜெய்ஸ்வால் இணைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க முடியும். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த பொறுப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வால் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் கேப்டனாக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். இதனால் ஜெய்ஸ்வால் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார். இந்த சீசனில் ஜெய்ஸ்வாலுக்கு சிறந்த ஒன்றாக அமைந்திருக்கிறது. முதல் பாதியில் ஜெய்ஸ்வாலின் பேட்டிங் அபாரமாக இருந்தது. 24 வயதிலேயே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஜெய்ஸ்வால் வளர்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கேப்டன்சி ரேஸில் இணைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே துணைக் கேப்டன் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் இன்னும் 3 வகையான இந்திய அணியிலும் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை.
தற்போதைய சூழலில் டெஸ்ட் அணியில் மட்டுமே முதல்நிலை வீரராக இருக்கிறார். கேப்டன்சி உயரத்தை எட்ட வேண்டும் என்பதற்காக ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக விளையாட தயாராகினார். ஆனால் கடைசி நேரத்தில் ரஹானேவுக்கு பின் மும்பை அணியின் கேப்டன்சி அளிக்கப்படும் என்று அணி நிர்வாகம் உறுதி அளித்ததால், அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் மும்பை அணி தரப்பில் ஜெய்ஸ்வால் அணுகப்பட்டார். ரோகித் சர்மாவின் இடத்தில் ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க மும்பை அணி விரும்பியது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வாலை தக்க வைக்க, சஞ்சு சாம்சன் வெளியில் அனுப்பப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ரியான் பராக் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருக்கும் கேப்டன்சி கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
ராஜஸ்தான் அணியின் ஒவ்வொரு முக்கிய முடிவிலும் ஜெய்ஸ்வாலிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணியால் ரீடெய்ன் செய்யப்பட ஒப்புக் கொண்டார். இதன் மூலமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் ஜெய்ஸ்வால் இணைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications