உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழக வீராங்கனைகள்.. பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள்! குவியும் பாராட்டு
சென்னை: பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி முருகேசன் வெள்ளியும் மனிஷா வெண்கல பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், இப்போது அங்கு மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.

கடந்த ஆக. 28ம் தேதி முதல் நடந்து வரும் இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பதக்கங்கள்: பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டிகள் நேற்று நடந்தது. இதில் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியு சியாவை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் இந்தியா சார்பில் களமிறங்கினார். இந்த போட்டி 21- 17, 21- 10 என்ற செட் கணக்கில் துளசிமதி முருகேசன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதே பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் 19 வயதே ஆன மனிஷா ராமதாஸ் களமிறங்கினார். அவர் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரென் 21- 12, 21- 8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் ஒற்றை பிரிவு பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தைச் சீனா வென்ற போதிலும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் இந்தியாவுக்கே கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி: பதக்கம் வென்ற இருவருக்கும் பலரும் பாராட்டி வருகின்றனர். பிரமதர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "பாரா ஒலிம்பிக் 2024ல் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்று பெருமையின் ஒரு தருணம்! அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸை பாராட்டிய பிரமதர் மோடி, "பாரா ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்ல மனிஷா ராமதாஸின் முயற்சி சிறப்பானது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்த நம்பமுடியாத சாதனை சாத்தியமாகி இருக்கிறது.. வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: பதக்கம் வென்ற இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதேபோல மனிஷா திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் இருவரையும் பாராட்டியுள்ளார். இருவரது வெற்றியால் பெருமை கொள்வதாகவும் அவர்களின் மன உறுதி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் பாரா பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசின் எலைட் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தைச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம். இன்றைக்குப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications