குற்றாலம் படகு குழாம் தீ விபத்து: பல லட்சம் படகுகள் சாம்பலாக காரணம் சதிச்செயலா?
குற்றாலம்: தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலம் படகு குழாமில் நிறுத்தப்பட்டிருந்த 15 படகுகள் புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது விபத்தா அல்லது போதை ஆசாமிகள் செய்த சதிச்செயலா என் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் வெண்ணைமடை குளம் உள்ளது. இந்தக் குளத்தில் தமிழ்நாடு ஹோட்டல் சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் படகு சவாரி நடைபெறும். இந்தக் குழாமில் இருவர், நால்வர் செல்லக்கூடிய துடுப்பு படகுகள், மிதி படகுகள், ஒருநபர் மட்டும் செல்லக்கூடிய கயாக் வகை படகுகள் என மொத்தம் 36 படகுகள் இருந்தன. குற்றாலத்திற்கு வரும் பயணிகள் படகில் உல்லாச பயணம் சென்று வருவார்கள்.
இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் இந்தப் படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதைப் பார்த்தவர்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் இம்மானுவேல் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொளுந்துவிட்டு எரிந்த தீ
இந்தப் படகுகள் ஃபைபர் வகையிலான படகுகள் என்பதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஹரிராம் தலைமையிலான வீரர்களும் வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
15 படகுகள் சாம்பல்
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதிலும், 15 படகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு பத்துலட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் படை மாவட்ட அலுவலர் சரவணபாபு, தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.
சதிச்செயலா?
குற்றாலத்தில் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய 3 மாதங்கள் சீசன் முடிந்தப்பின் இந்த படகுகளை பராமரிக்க காவலர்கள் வசதி இல்லாத நிலை உண்டு. இந்த படகுகளை இந்தப் பகுதியில் செல்லும் போதை ஆசாமிகள் மது அருந்திவிட்டு போதையில் தீயை பற்றவைத்துவிட்டு சென்றுவிட்டார்களா?. இல்லை யாரும் சதி செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications