இலங்கையில் கன மழைக்கு 23 பேர் பலி
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் பெய்துவரும் பேய் மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கொழும்பு நகரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இந்த பேய் மழையால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தன, வீடுகள் இடிந்தன.
இலங்கையின் மேற்கு, மத்தி மற்றும் தெற்கு பகுதிகளிலுள்ள ஆறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழயால் இடர்பாடுகளில் சிக்கி 23 பேர் வரை பலியாகியுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய இயக்குநர் சரத் லால் குமாரா தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக 27,200 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 150 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 137 பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புற நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அங்கு இருவரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு பருவமழை விடாமல் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.