இலங்கை நாடாளுமன்றத்தில் மலையகத்தில் இருந்து 8 இந்திய வம்சாவளி தமிழ் எம்.பிக்கள்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளில் இருந்து மலையகத்தைச் சேர்ந்த 8 இந்திய வம்சாவளி தமிழ் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக நாளை பதவியேற்க உள்ளார்.
ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 எம்.பி.க்கள் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றனர். இவர்கள் அல்லாமல் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட ஒரு சில தமிழ் எம்.பிக்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் மலையகத்தில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 தமிழ் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன், திலகராஜ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம்
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் ஊவா மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்தகுமார், கண்டி மாவட்டத்தில் இருந்து வேலுகுமார் ஆகியோர் புதிய எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.