தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி காலமானார்!
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி (வயது 43) புற்றுநோயால் காலமானார்.
கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த தமிழினி 1991ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவில் அரசியல்துறை பொறுப்பாளராக பதவி வகித்தார்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோருடன் தமிழினி இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். இலங்கை ராணுவ தடுப்புக் காவலில் இருந்து 2013ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மஹரகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழினியின் உடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராசா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழினியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications