தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நெட்வொர்க், நிதி ஆதரவு தொடர்கிறது: அமெரிக்கா
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச நெட்வொர் மற்றும் அந்த இயக்கத்தின் நிதி ஆதரவு தொடர்வதாக அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் எந்த தீவிரவாத தாக்குதலும் நடக்கவில்லை. இலங்கை அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக 13 விடுதலைப்புலிகள் 2014-ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் இந்தியாவில் உள்ள 'அமெரிக்கா, இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டவர்கள்' என்று கூறப்பட்டு உள்ளது.
2014-ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக 16 அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்பின் திட்டங்களுக்காக 422 பேர் நிதி உதவி செய்து இருப்பதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
2009-ம் ஆண்டு நடந்த உச்சகட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிப்பட்டு விட்டாலும் கூட சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பு உள்ளது; அந்த இயக்கத்துக்கு நிதி உதவி அளிப்பதும் இன்னும் நீடிக்கிறது.
இவ்வாறு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.