ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்த முதல் இலங்கை தீவிரவாதி பலி- இன்னமும் 16 பேர் களத்தில்...
கொழும்பு: உலகின் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் முதன் முதலாக இணைந்த இலங்கை தீவிரவாதி அபு ஷூரயா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 16 இலங்கை தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இன்னமும் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இலங்கை குருநாகல் கலேவெலவைச் சேர்ந்த அபு ஷூரயா, தன்னுடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் ஐக்கியமாகியிருக்கிறார். மேலும் இலங்கை நாட்டவரை மூளைச் சலவை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படி இலங்கையைச் சேர்ந்த 16 பேரையும் இந்த இயக்கத்தில் அபு ஷுரயா இணைத்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதியன்று விமான தாக்குதல் ஒன்றில் அபு ஷூரயா கொல்லப்பட்டுவிட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பத்திரிகையான தாபிக் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 16 இலங்கை நாட்டவர் இணைந்துள்ள போதும் தங்கள் நாட்டுக்கு எந்த ஒரு தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.