ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோற்றுவிட்டால் மகிந்த ராஜபக்சேவால் கொலை செய்துவிடப்படுவோம் என அஞ்சி நண்பரின் தென்னந்தோப்பில் விடிய விடிய மைத்ரிபால சிறிசேன பதுங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
அதிபர் தேர்தல் நாளான ஜனவரி 8-ந் தேதியன்று பொலன்னறுவவில் வாக்களித்த மைத்திரிபால சிறிசேன, தமது வீட்டை விட்டு வெளியேறி இரகசிய இடம் ஒன்றில் மறைந்திருக்க முடிவு செய்தார்.

தேர்தலுக்கு மறுநாள் முடிவுகள் வெளியான பின்னர் வீட்டில் இருந்தால் தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படும் என்ற தகவல் அவருக்கு கிடைத்திருந்தது.
அதனால் கும்மிருட்டு நேரத்தில் தம்புள்ளை என்ற இடத்தைக் கடந்து மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய நண்பரான கிரன் அத்தப்பத்தவுக்குச் சொந்தமான தொடங்கஸ்லந்தவில் உள்ள தென்னந்தோப்பை நோக்கிச் சென்றது.
அந்த கிராமம் இருளில் மூழ்கியிருந்த போது கறுப்பு நிற பிஎம்.டபிள்யூ கார், மைத்திரிபால சிறிசேனவுடன் அந்த தோட்டத்தை சென்றடைந்தது.
தாம் மறைந்திருக்கும் இடத்தைக் எவரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக குறுகிய கும்மிருட்டு வீதி வழியாக அந்த வாகனம் தென்னந்தோப்பை சென்றடைந்தது.
அதே நேரத்தில் சிறிசேனவை பின் தொடர்ந்த வாகனங்கள் மற்றொரு இடத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் ஒரு சில வாகனங்கள் மட்டுமே தென்னந்தோப்புக்குள் சென்றன.
மைத்திரிபால சிறிசேன, அவரது மனைவி ஜெயந்தி புஸ்பகுமாரி, அவரது பிள்ளைகள் தஹம், சதுரிகா, தாரணி, மருமகன் திலின, மற்றும் பேரப் பிள்ளைகள் ஆகியோர் அந்த தென்னந்தோப்பில் பதுங்கியிருந்தனர்.
ஒருவழியாக தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பது உறுதியான பின்னரே அவர்கள் நிம்மதி அடைந்தனர். அதன் பின்னரே மறுநாள் காலை தைரியமாக சிறிசேனவும் வெளியே வந்தார்.
இவ்வாறு அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications