இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி!
கொழும்பு: இலங்கை விவகாரத்தில் புதிய திருப்பமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அந்நாட்டுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் இலங்கை மீதான விசாரணையை வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரப்படும் என அமெரிக்காவின் மத்திய, தெற்காசிய விவகாரங்கள் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிஷா பிஸ்வால், கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஜெனீவாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநாட்டில் இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு ஆதரவு தரப்படும்.
இலங்கை அரசுடனான நல்லுறவைப் பேணும் வகையில் இந்த தீர்மானம் அமையும். இலங்கையில் தற்போதைய சூழலில், வேற்றுமைகளை அகற்றி சமரசம் மலர ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அந்த வகையிலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு நிஷா பிஸ்வால் கூறினார்.