இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் புதிய டாகுமெண்டரி....
கொழும்பு: இலங்கையின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் "இலங்கை- நீதிக்கான தேடல்" என்ற புதிய ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கல்லம் மக்ரே.
இவர்தான் தற்போது "இலங்கை- நீதிக்கான தேடல்' (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் அரை மணிநேர ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தில் இலங்கையில் இதுவரை நடந்த இனப்படுகொலை; 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் நிகழ்த்திய ஈவிரக்கமற்ற படுகொலை காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையத்தில் வெளியாக உள்ளது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார்.
அவர் அமெரிக்கா சென்று நியூயார்க், வாஷிங்டனில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பிக்க உள்ளார். அதன் பின்னர் ஜெனீவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்திலும் இதனை காண்பிக்கவும் கல்லம் மக்ரே திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications