வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி வீட்டை தாக்கிய மர்மநபர்கள்: டிவி விளம்பரம் காரணமா?
யாழ்ப்பாணம்: அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் வடக்குமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வீட்டை இன்று அதிகாலை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் ராஜபக்சே போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தலை புறக்கணிக்குமாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குரலில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விளம்பரம் வெளியானது.
அந்த விளம்பரத்தில் வந்தது தனது குரலே அல்ல என்று அனந்தி தெரிவித்தார். மேலும் அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப தொலைக்காட்சிக்கு பணம் அளித்தவர்களின் விவரத்தை அவர் கேட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சுழிபுரம் வழக்கம்பரையில் உள்ள அனந்தி வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வீச்சு சப்தம் கேட்டு எழுந்த அனந்தி விளக்கை போட்டவுடன் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி அவர் போலீசார் மற்றும் வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.