என்னை கொல்ல திட்டமிட்டனர்.. அதனால் ரணிலை நீக்கினேன்.. சிறிசேனா பரபரப்பு!
இலங்கையில் ரணிலை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தது ஏன் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் ரணிலை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தது ஏன் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது.
[ரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்?- ராஜபக்சேவை நியமித்தது ஏன்?.. சிறிசேனா பரபரப்பு தகவல்]
கொலை செய்ய திட்டம்
இந்த நிலையில் தன்னை கொலை செய்ய நடந்த திட்டம் காரணமாகவே ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதாக சிறிசேனா அறிவித்துள்ளார். ரணிலின் அமைச்சரவையில் உள்ள முக்கியமான அமைச்சர் ஒருவர்தான் இந்த கொலையை திட்டமிட்டார். அதனால் நடவடிக்கை எடுத்தேன் என்றுள்ளார்.
அவருக்கும் தெரியும்
மேலும், இந்த கொலை திட்டம் குறித்து ரணிலுக்கு எல்லா விவரங்களும் தெரியும். அந்த அமைச்சர் யார் என்று ரணிலுக்கு அப்போதே தெரியும். அந்த அமைச்சர் குறித்து இப்போது சொல்ல முடியாது. விரைவில் அதுபற்றி அறிவிப்பு வெளியாகும்.
நடவடிக்கை எடுக்கவில்லை
இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதை வைத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். ராஜபக்சே பிரதமர் ஆன காரணத்தால், விரைவில் ரணில் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.
யார் அவர்
இந்த நிலையில் சிறிசேனவை கொலை செய்ய முயற்சி செய்த அந்த அமைச்சர் யார் என்று இலங்கை பத்திரிக்கைகள் எழுதி இருக்கிறது. இலங்கையின் அமைச்சரவையை சேர்ந்த மூத்த அமைச்சர் சரத் பொன்சேகாதான் இந்த கொலையை திட்டமிட்டது என்று எழுதியுள்ளன.