ரணிலை பதவியிலிருந்து நீக்கியது ஏன்?- ராஜபக்சேவை நியமித்தது ஏன்?.. சிறிசேனா பரபரப்பு தகவல்
Recommended Video
கொழும்பு : பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியது குறித்து அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அதிபராக பதவியேற்று வந்த ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 26-ஆம் தேதி அதிபர் சிறிசேனா பதவியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக சிறிசேனா நியமித்தார்.
இதனால் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ராஜபக்சேவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என ரணில் கோரிய நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிசேனா. ரணிலுக்கான பாதுகாப்பை ரத்து செய்தார்.
இலங்கை அரசியலில் புயல்.. கொழும்பில் ராணுவம் குவிப்பு.. ராஜபக்சே இன்று பிரதமராக பதவியேற்பு?
அரசியல் நடவடிக்கை
இத்தனை அதிரடி நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களிடம் சிறிசேனா உரையாற்றினார். அப்போது ரணில் பதவி நீக்கத்துக்கு அவரது கர்வமான நடத்தையே காரணம் என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னர் விக்கிரமசிங்கவின் அரசியல் நடவடிக்கைகள் சரியில்லை.
சீரழிவு
இலங்கையின் எதிர்காலத்தை பொழுதுபோக்காகவே நடத்தினார். சாதாரண மக்களின் எண்ணங்களை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஊழல் உள்ளிட்ட காரணங்களால் சிறந்த நிர்வாகத்தை அவர் சீரழித்துவிட்டார்.
சரிவு
கொள்கை முடிவுகள் என்று பார்த்தோமேயானால் எங்கள் இருவருக்கும் இடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டது. ரணிலால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி கவர்னர் அர்ஜுன மகேந்திரன் பத்திர ஊழல் புகாரில் சிக்கினார். இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டது.
கொலை செய்ய சதி
அதுபோல் என்னை கொலை செய்வதற்கு நடந்த சதியிலும் ரணிலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இத்தகைய அரசியல், பொருளாதாரம் மற்றும் கொலை சதிகளுக்கு மாற்றாக என்னிடம் ஒரு நடவடிக்கைதான் இருந்தது. அதுதான் ராஜபக்சேவை பிரதமராக்குவது. அதன்படி அவர் நியமிக்கப்பட்டார் என்று சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.