பாகிஸ்தானைப் பார்த்துப் பாடம் படித்த ராஜபக்சே - அத்தனை தமிழக மீனவர்களையும் விடுவிக்க உத்தரவு!
கொழும்பு: நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவுக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டதைப் பார்த்து தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கடல் எல்லையில் குஜராத் இருக்கிறது. இலங்கைக் கடற்படைக் காடையர்களால் எப்படி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் பிடித்துச் செல்லப்படுகிறார்களோ அதேபோல, பாகிஸ்தான் அரசால் குஜராத் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கம்.
ஆனால் பாகிஸ்தான் இந்த விஷயத்தில் மிக மிக நல்ல நாடு. காரணம், இதுவரை ஒரு இந்திய மீனவரைக் கூட அது சுட்டதில்லை. கொன்றதில்லை. ஆனால் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை. தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. ரவுடித்தனத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் பதவியேற்க இருக்கிறார் .இதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் வாடும் 151 குஜராத் மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
தற்போது இதே பாணியில் சிங்களத்து ராஜபக்சேவும் தனது நாட்டு சிறையில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசைப் பார்த்து இவரும் அதே பாணியில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்புக்கு ராஜபக்சேவும் வருகிறார். அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் கிளம்பியுள்ளது. இந்தநிலையில்தான், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க, ராஜபக்சே உத்தரவிட்டார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பதவியேற்புக்கு வந்து விட்டுத் திரும்பியதும் இதையேதான் திரும்பவும் சிங்களக் காடையர்கள் செய்யப் போகிறார்கள்.. எனவே இது தமிழக எதிர்ப்பை சமாளிக்க ராஜபக்சே கும்பல் நடத்தும் கண் துடைப்பு நாடகம் என்று கருதப்படுகிறது.