சொத்து விவரத்தை வெளியிட்டால்தான் வேட்பாளர் அடையாள அட்டை- இலங்கை தேர்தல் ஆணையம்
கொழும்பு: இலங்கையில் சொத்து விவரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு அடையாள அட்டைகள் கிடைக்காது என்று இலங்கை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடத் தவறுகின்றவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படாது. தேர்தல் போட்டியிடும் பெரும்பாலானோர் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை. முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இவ்வாறு சொத்து விபரங்கள் பற்றிய ஆவணத்தை ஒப்படைக்கவில்லை.
வேட்பாளர் அடையாள அட்டை இல்லாத எந்தவொரு வேட்பாளருக்கும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியாது. குறைந்த பட்சம் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் கூட இந்த வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தேர்தலில் போட்டியிடும் கட்சி பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், இதுவரையில் 200க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் புகார்கள் குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications