எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம் - இலங்கை மசோதாவிற்கு தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.17.5 கோடி வரை அபராதமாக விதிக்க வகை செய்யும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு: எல்லை தாண்டுவதாக பிடிபடும் தமிழக மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 17.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கச் செய்யும் புதிய சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதும், சித்திரவதைக்கு ஆளாவதுமாக அவதிப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு, இலங்கையின் இந்தப் புதிய சட்டம், மேலும் ஒரு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டி வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் பலன் அளிக்கவில்லை.
இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் அபராதம் விதிக்க இலங்கை மீன்வளத்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டு, சட்ட திருத்தத்தை தயாரிப்பதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டது.
சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான திருத்தப்பட்ட மசோதா என்ற பெயருடன், கடல் தொழில், நீரியல் மற்றும் வனத்துறை அமைச்சர் மகேந்திர அமரவீர இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும், 15 முதல் 24 மீட்டர் நீள படகுக்கு ரூ.2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.10 கோடியும், 45 மீட்டர் முதல் 75 மீட்டர் நீளமுடைய படகுக்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகுக்கு ரூ.17.5 கோடியும் அபராதம் விதிக்கப்படும்.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டு படகுகளின் உரிமையாளர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கு ஒரு மாதத்துக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த புதிய சட்ட மசோதா தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புயல் காலங்களில் திசை மாறி சென்றாலோ, தவறுதலாக எல்லை தாண்டினாலே கைது செய்யப்படும் நிலையில் இந்த சட்டம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications