இலங்கையில் பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் - ராணுவத்துடன் மோதல்- குவியல் குவியலாக சடலங்கள்!
Recommended Video
அம்பாந்துறை: இலங்கையின் கிழக்கு மாகாணமான அம்பாறையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இடங்களை சுற்றிவளைத்த ராணுவத்தினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதலில் ஈடுபட்டனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீடு ஒன்றில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 100க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்; அவர்கள் அனைவரையும் கைது செய்தே தீருவோம் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்திருந்தார். ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்புடைய பல இடங்களில் கடந்த சில நாட்களாக ராணுவத்தினர் தொடர் சோதனைகளை நடத்தி வந்தனர்.

பிரதான சம்பாந்துறை முகாம்
இந்நிலையில் அம்பாறை மாகாணம் சம்பாந்துறையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கூட்டமாக பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியை ராணுவம் முற்றுகையிட்டது. அங்கு பதுங்கி இருந்த 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ். இயக்கத்தின் பேனர், மனித வெடிகுண்டுகளின் உடைகள், மனித வெடிகுண்டுகள் நடத்துவதற்கான ஜாக்கெட்டுகள், ஜெலட்டின் குச்சிகள், 1 லட்சம் இரும்பு குண்டுகள், ஆளில்லா வேவு கருவி உட்பட ஏராளமானவை கைப்பற்றப்பட்டன. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்ட புகைப்படம் சம்பாந்துறையில்தான் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

சாய்ந்த மருது முகாம்
சாய்ந்தமருது என்ற இடத்திலும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்தும் அங்கும் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். இந்த மோதல் இரவிலும் நீடித்த நிலையில் இன்று காலை முதல் தேடுதல் வேட்டை தீவிரமானது. அப்போது குண்டுகளை வெடிக்க செய்த வீட்டில் இருந்து மொத்தம் 15 சடலங்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். இதில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள், 3 பெண்கள் உடல்கள் இருந்தன. அங்கு படுகாயமடைந்த நிலையில் இருந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிந்தாவூர் துப்பாக்கிச் சூடு
மேலும் நிந்தவூர் பள்ளிவாசலுக்குப் பின்புறம் வெடிகுண்டு சப்தம் கேட்டது. இதையடுத்து ராணுவம் அங்கும் விரைந்தது. அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் உக்கிரமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 2 மணிநேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்கு சட்டங்கள் நீட்டிப்பு
அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் கல்முறை, சம்பாந்துறை, சாய்ந்மருது உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் உள்ளது.












Click it and Unblock the Notifications