தேர்தல் நேரத்தில் இலங்கை வரும் போப் பிரான்சிஸ்: ராஜபக்சேவின் திட்டம் என்னவோ?
கொழும்பு: போப் பிரான்சிஸ் திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே தங்கள் நாட்டுக்கு வருமாறு போப் பிரான்சிஸுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று போப் வரும் ஜனவரி மாதம் இலங்கை வருகிறார் என்று ராஜபக்சே அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராஜபக்சே தனது ஆட்சி காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பே வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் போப் இலங்கை செல்வது நன்றாக இருக்காது என்று கருதுகிறது வாட்டிகன். புத்த மதத்தினர் அதிகம் உள்ள இலங்கை மக்கள் தொகையில் சுமார் 6 சதவதீம் பேர் ரோமன் கத்தோலிக்கர்கள். போப் வரவை பயன்படுத்தி ராஜபக்சே அவர்களின் வாக்குகளை எளிதில் பெற்றுவிடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் வாக்குப்பதிவு தேதியை போப் இலங்கைக்கு வந்து சென்ற பிறகு ஜனவரி மாத இறுதியில் வைத்துக்கொள்ளுமாறு வாட்டிகன் அறிவுறுத்தியுள்ளது.
போப் ஜனவரி 13,14,15 ஆகிய தேதிகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜனவரியில் தான் தேர்தல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் அம்மாதத்தில் நடத்தவே திட்டமிட்டுள்ளார்களாம். அதிலும் ஜனவரி 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகள் ஜோதிடப்படி ராஜபக்சேவுக்கு ராசியானவையாம். அதே சமயம் மார்ச் மாதத்தின் 7, 8 மற்றும் 9ம் தேதியில் தேர்தலை நடத்தலாமா என்றும் பரிசீலித்து வருகிறார்களாம்.
தேர்தல் நேரத்தில் போப் இலங்கை செல்வதா என்று வாட்டிகன் கவலை அடைந்துள்ள நேரத்தில் அவரை வரவேற்க ராஜபக்சே அரசு தயாராகி வருகிறது. தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் எண்ணத்தில் ராஜபக்சே கடந்த மாதம் வரிகளை குறைத்து, ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்து, மானியங்கள், புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications