சரியும் செல்வாக்கு: அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த ராஜபக்சே முடிவு
கொழும்பு: இலங்கையில் தம்முடைய செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீது சர்வதேச நாடுகள் ஆதரவுடன் போரை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2016 வரை...
இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு அதிபர் தேர்தலை நடத்தி மீண்டும் அதிபரானார் ராஜபக்சே. இலங்கையைப் பொறுத்தவரையில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், ராஜபக்சேவின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளது.
ஊழல் விஸ்வரூபம்
ஆனால் இலங்கையின் அரசியல் சாசனப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று அந்நாட்டின் சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதுடன் இவர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் விஸ்வரூபமெடுத்துள்ளன.
சரிந்த செல்வாக்கு..
இதனால் இலங்கையில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிங்கள மக்களிடத்தில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இது கடந்த மாதம் நடந்த ஊவா மாகாண தேர்தலில் எதிரொலித்தது. அங்கு ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றாலும், அந்த கட்சிக்கு கடந்த 2009-ம் ஆண்டை விட 21% வாக்குகள் குறைவாகவே கிடைத்தன.
அதிர்ச்சியில் ராஜபக்சே குடும்பம்
இத் தேர்தல் முடிவுகள் ராஜபக்சே குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
முன்கூட்டியே தேர்தல்
இப்படி தமக்கான செல்வாக்கு குறைந்து வருவதால் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அனேகமாக ஜனவரி மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
பொதுவேட்பாளர்
அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன