இலங்கைச் சிறையில் இருந்து 77 மீனவர்கள் விடுதலை!
இலங்கைச் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு : இலங்கைச் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைச் சிறையில் தமிழகத்தை சேர்ந்த 92 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நன்னடத்தை காரணமாக முதற்கட்டமாக 77 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது..
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என்று தெரிகிறது.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்துல் கலாம் மணி மண்டப நிகழ்ச்சியின் போது பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் மீனவர்களை மட்டும் விடுவித்தது போதாது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.