உச்ச கட்ட பரபரப்பில் இலங்கை தேர்தல் களம்- தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டணி!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்புவில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழர் பிரச்னைக்கு நாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு எவை என்பதை தெரிவித்துள்ளோம். அதற்கு தமிழ் மக்களின் ஆதரவை கோரியுள்ளோம். அதிகபட்ச அதிகார பகிர்வுக்கு குறைவான எந்த ஒரு தீர்வும், தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை தராது என அறிக்கையில் தெரிவித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களின் அடிப்படை கோரிக்கைகளை மையமாக வைத்து அரசுடன் பேச்சைத் துவக்குவோம்.

பிரிவினையின்றி ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் வடகிழக்கு மாகாணத்தின் சுயாட்சியை உறுதி செய்யும் உரிமை நமக்கு உள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐ.நா சர்வதேச உடன்படிக்கைகளின்படி தமிழ் மக்களுக்கு தங்கள் முடிவை தாங்களே தீர்மானிக்கும் உரிமை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவ குவிப்பை அகற்றி 1983க்கு முந்தைய நிலைக்கு கொண்டு செல்வது, ஆயிரக்கணக்கானோர் மாயமான காரணத்தை கண்டறிவது, தென்னிந்தியாவில் உள்ள லட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் 225 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து 29 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அனைத்து இடங்களுக்கும் தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications