முஸ்லீம்கள் மீது சிங்களக் கொலை வெறித் தாக்குதல்.. வீடியோ வெளியீடு
கொழும்பு: இலங்கையில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீது சிங்களக் கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதும், மசூதி, வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தியதும் வீடியோ காட்சிகளாக தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகளில் முகங்களை துணியால் மூடியபடி சிங்கள இனவெறியர்கள் தாக்குவதும், பொருட்களை சூறையாடுவதும், வணிக வளாக பணியாளர்களை தாக்குவதும் இடம் பெற்றுள்ளது.
மேலும் இஸ்லாமியர் ஒருவரின் கடைக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி அதை சேதப்படுத்தும் காட்சியும் உள்ளது.
பொது பல சேனா என்ற புத்த வெறி அமைப்பைச் சேர்ந்த சிங்களர்கள் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழர்களை நிராயுதபாணிகளாக மாற்றி விட்ட நிலையில் தற்போது இஸ்லாமியர்களை சிங்களர்கள் குறி வைத்துத் தாக்குதலில் குதித்துள்ளனர். இதை அங்குள்ள இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கவில்லை.
பல்வேறு முஸ்லீம் பகுதிகளிலும் சிங்களக் கும்பல்கள் ரவுடித்தனத்திலும், தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் தாக்குதலில்3 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இலங்கையைப் பொறுத்தவரை சிங்களர் - தமிழர் மோதல்தான் முன்பு பிரதானமாக இருந்தது. ஆனால் சிங்களர்- முஸ்லீம் மோதல் பெரும்பாலும் இருந்ததில்லை. காரணம், முஸ்லீம்கள் சிங்களர்களுடன் இணக்கமாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால் இப்போது சிங்களர்கள் திடீரென முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியிருப்பது அங்குள்ள முஸ்லீம்களை அதிர வைத்துள்ளது.
அளுத்கமா, பேருவளை, தர்கா நகர் ஆகிய பகுதிகளில்தான் வன்முறை வெடித்தது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகோடா அட்டே ஞானசரா என்பவர் தலைமையில் இந்தத் தாக்குதலில் சிங்களர்கள் ஈடுபட்டனர்.