பெருமழை... பெருக்கெடுத்தோடும் வெள்ளம்... இலங்கையில் 164 பேர் பலி
இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் களுத்துறை, ரத்தினபுரி , மாத்துறை, கேகாலை மற்றும் கம்பகா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி இதுவரை 164 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் அதிகமானோரை காணவில்லை. 88 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவிக்கையில், இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத மழை பெய்தது. 1.28 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 4.71 லட்சம் மக்கள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24,603 குடும்பத்தை சேர்ந்த 1.01 லட்சம் பேர், சுமார் 320 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று தெரிகிறது.
தொடர் மழையால் கீலானி ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே நாகாலகம், ஹான்வால்லா, க்ளென்கோர்ஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
50,000 பேர் வீடின்றி தவித்து வருகின்றனர். மீட்பு பணிகளில் இலங்கையின் முப்படைகளும் ஈடுபட்டுள்ள போதிலும் தொடர் மழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் 150 மி.மீ. அளவுக்கு மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications