டெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம்.. நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்?
சிட்னி: கூகுள் மற்றும் பேஸ்புக் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அந்த டெக் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தக் கோரும் மிக முக்கிய சட்டத்திற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்றைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கிவிட்டன. உணவு, உடை, சுற்றுலா என கிட்டதட்ட அனைத்து முடிவுகளையும் நாம் டிஜிட்டல் உலகில் கிடைக்கும் தகவல்களை நம்பியே எடுக்கிறோம். இதனால் உலகிலுள்ள சில டெக் நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் கோடிக் கணக்கில் வருவாய் ஈட்டுகின்றன.
தற்போது பெரும்பாலான மக்கள் செய்திகளைக்கூட பேஸ்புக் மற்றும் கூகுள்களிலேயே படிக்கின்றன. இதனால் ஊடக நிறுவனங்களுக்குப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தற்போது புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டம்
ஆஸ்திரேலிய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள News Media and Digital Platforms Mandatory Bargaining Code என்ற சட்டத்தின்படி, இனிமேல் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடகங்கள் அளிக்கும் செய்திகளைப் பயன்படுத்த ஊடக நிறுவனங்களுக்கு ராயல்டி அளிக்க வேண்டும். சர்வதேச அளவில் டெக் நிறுவனங்களுக்கு எதிராக இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.
டெக் நிறுவனங்கள் அதிருப்தி
இந்தச் சட்டத்திற்கு பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. செய்திகளுக்குப் பணம் செலுத்தும் முறை என்பது தங்கள் தொழில் முறைக்கே ஆபத்து என்றும் வாதிட்டனர். இருப்பினும், ஆஸ்திரேலியா அரசு இச்சட்டத்தில் எவ்வித திருத்தத்தையும் மேற்கொள்ளப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஒப்பந்தம் போட்ட கூகுள்
இச்சட்டத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படப்போவது கூகுள் நிறுவனம்தான். ஏனென்றால் பொதுமக்கள் கூகுளில் ஒன்றை தேடும்போது, அதன் செர்ச் இன்ஜின் செய்திகளைப் பயனாளர்களுக்கு வரிசைப்படுத்தி அளிக்கும். ஆனால், இச்சட்டத்தால் இனி அப்படி அளிக்கும் செய்திகளுக்கு ராயல்டி அளிக்க வேண்டிய சூழலுக்குக் கூகுள் தள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் கூகுள் நிறுவனம் தற்போது ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப் மற்றும் நைன் என்டர்னெய்மென்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்?
இதேபோல பேஸ்புக் நிறுவனமும் பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலாயில் செய்திகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவு என்பதால் அந்நாட்டில் செய்திகள் பிரிவையே ஒட்டுமொத்தமாக மூடுவது குறித்தும் ஆஸ்திரேலியா சிந்தித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் பேஸ்புக் நிறுவனமும் எதாவது செய்தி நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு விளக்கம்
ஊடக நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் விளம்பரங்களை மேற்கொள்ளப் பெரியளவில் செலவழிக்க வேண்டியிருப்பதாகவும் இதனால் நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் டெக் நிறுவனங்கள் ஆஸ்திரேலேயாவில் பெரும் தொகை முதலீடு செய்ய வேண்டும் என்றும் இது ஊடக நிறுவனங்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.