நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு "கடிவாளம்".. இதெல்லாம் தேவையில்லாத குழப்பம்.. தமிழக அரசு புது அதிரடி
சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குனரகம், அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கவும், மக்கள் ஓய்வெடுக்க சில பசுமையை வழங்கவும் திறந்தவெளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள் போன்றவை கட்டப்படுகின்றன.

விதிமுறைகள்: ஒரு திறந்தவெளி முன்பதிவுக்கு 10 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணமும் 100 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவும் இருக்க வேண்டும். அதேபோல, தற்போதைய விதிமுறைகளின்படி, திறந்தவெளிக்கான பரப்பளவு நிலப்பரப்பில் 10 சதவீதம் இருக்க வேண்டும்.
அந்தவகையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவைகளில், 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பது கட்டாயம். இந்த நிலங்களை, உள்ளாட்சி அமைப்புகள், பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கடிவாளம்: ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இந்த நிலங்களை, வேறுவகையான தேவைகளுக்கு பயன்படுத்துவதாக சமீபகாலமாகவே, புகார்கள் கிளம்பி உள்ளனவாம். இதற்கு கடிவாளம் போடுவதற்காகவே, அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், "பொது பயன்பாட்டுக்கென்று ஒதுக்கப்படும், ஓஎஸ்ஆர் நிலங்களை, பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த நோக்கத்துக்காக, இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை, மன்ற தீர்மானம் என்ற அடிப்படையில், இந்த நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன.
முன்மொழிவுகள்: இருப்பினும், பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை மீண்டும் மீண்டும் அனுப்புகின்றன. இது, தேவையில்லாத குழப்பங்களுக்கு வழி வகுப்பதாக உள்ளது. எனவே, நகராட்சிகள், மாநகராட்சிகள் இது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications