வெள்ள தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி படுதோல்வி: தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் மழை, வெள்ள தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் மாநகராட்சி படுதோல்வி அடைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரின் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் மயிலாப்பூர் சித்திரைக்குளம் கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மழை, வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சென்னை மாநகராட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் முறையாக சேரவில்லை. சென்னையில் வெள்ள சேதங்களை மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் நேரில் பார்வையிட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி மிகவும் சேதம் அடைந்திருப்பதை தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசிடம், மாநில அரசு கோரி உள்ளது. நிச்சயமாக தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications