நோயாளியிடம் ரூ.1.20 லட்சம் “அபேஸ்”- கோவை மருத்துவமனையில் திருடர்கள் கைவரிசை
கோவை: கோவை மருத்துவமனையில் நோயாளியிடம் ரூபாய் 1.20 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குமாரதாரா பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இவரது மனைவி உமாதேவி, சரவணகுமாருக்கு துணையாக இருந்து அவரை கவனித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை சரவணகுமாருக்கு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதற்கான கட்டணத்தில் 30 ஆயிரம் ரூபாயை மட்டும் முன் பணமாக கட்டிவிட்டு, மீதம் 1.20 லட்சம் ரூபாயை தனது கைப்பையில் உமாதேவி வைத்திருந்தார்.
அத்துடன் முக்கால் பவுன் மோதிரம், ஒரு கிராம் தங்க டாலர் மற்றும் ஒரு வெள்ளி மோதிரமும் வைத்திருந்தார். திங்கள்கிழமை மாலை மருத்துவமனை அறையில் சரவணகுமார் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார்.
பணம் மற்றும் நகையுடன் இருந்த கைப்பையை கணவர் அருகே வைத்துவிட்டு அறையின் உள்ளே இருந்த கழிவறைக்கு சென்ற உமாதேவி திரும்பி வந்து பார்த்தபோது, அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. அவர் வைத்துவிட்டுச் சென்ற கைப்பை காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து உமாதேவி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள கோவை ராமநாதபுரம் போலீசார் கொள்ளையடித்துச் சென்ற நபர்களைப் பற்றிய விவரங்களை திரட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications