காஞ்சிபுரம்: பள்ளி மாணவர்கள் மோதல்… ப்ளஸ்1 மாணவன் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலில் ப்ளஸ் 1 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த மாணவரின் பெயர் ஜானகி ராமன் என்பதாகும். இவர் கூலித்தொழிலாளி பாபு என்பவரின் மகனாவார். நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற மாணவன் ஜானகி ராமனுக்கும், சகமாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி அது கைகலப்பில் முடிந்தது. இதில் ஜானகிராமனை சக மாணவன் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ஜானகிராமன் மயக்கமடைந்தான்.
இதனையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக ஜானகிராமனை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல்சிகிச்சைக்காக மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மாணவன் ஜானகி ராமன் உயிரிழந்தான்.
இதனையடுத்து ஜானகி ராமனை தாக்கிய மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் உயிரிழப்பை அடுத்து இன்று சுப்புராய முதலியார் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.