'மக்களின் முதல்வர்', 'மக்களின் தலைமைச் செயலாளர்', 'மக்களின் டிஜிபி'.. இப்படி பண்றீங்களேம்மா!...
சென்னை: சினிமாவில்தான் ஹீரோவுக்கு சண்டை காட்சிகளிலும், ரிஸ்க்கான காட்சிகளிலும் டூப் போடுவார்கள். ஆனால் தமிழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களையே டம்மியாக்கிவிட்டு அவர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்தான் அதிகம் செயல்படுவதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்.
இவர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கு இணங்கதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதனால்தான் எதிர்கட்சியினர் இரட்டை ஆட்சி என்றும், டம்மி ஆட்சி என்றும் விமர்சிக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில்
முதல்வர் மட்டுமல்ல, தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி என உயர்ந்த பதவிகளுக்கும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதான் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு.
டம்பி பதவியா?
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் இல்லை. அதுபோல, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்குப் பின்னால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் ஆலோசகர் என்ற பெயரில் நியமிக்கப்பட்டு, அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். தமிழக போலீஸ் டி.ஜி.பி அசோக்குமாருக்குப் பின்னால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ராமானுஜம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் உச்சக்கட்ட அதிகாரமிக்க பதவிகள் டம்மியாக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் குமுறல்
ஓய்வுபெற்றவர்களை ஆலோசகர்கள் என்ற பெயரில் நியமித்தால், தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு திறமை இல்லை என்று சொல்வதாகத்தானே அர்த்தம். இப்படியே ஒவ்வொரு துறைக்கும் இதேபோல் நியமிக்க ஆரம்பித்தால், நிழல் அரசாங்கம்தான் நடக்கும். திறமையற்றவர்களை ஏன் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில் ஒருவரை ஏன் நியமிக்க வேண்டும் என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குமுறலாகும்.












Click it and Unblock the Notifications