வாகன சோதனை: அறந்தாங்கி அருகே 10 கிலோ தங்கம் பறிமுதல்
புதுக்கோட்டை: தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அறந்தாங்கி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆம்னி பஸ் ஒன்றில் இருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. முறையான ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க ஆங்காங்கே தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை அவர்கள் வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் பஸ்ஸில் இருந்த 10 கிலோ தங்கம் சிக்கியது.
முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை எடுத்துச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications