அஸ்வத்தாமன் இல்ல திருமண விழாவில் ரூ.10 லட்சம் திருட்டு.. ஆளுநர் ரவி, அண்ணாமலை கூட வந்திருந்தாங்களே!
கள்ளக்குறிச்சி: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இல்ல திருமண விழாவின்போது ரூ.10 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநில செயலாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் இல்ல திருமண விழா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமனின் தங்கை தீபலட்சுமி - வீரசோழபாண்டியன் திருமண விழா உளுந்துார்பேட்டை திருச்சி சாலையில் உள்ள லலிதா சக்கரவர்த்தி திருமண மண்டபத்தில், இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) நடந்தது. நேற்று (9ஆம் தேதி) மாலை வரவேற்பு விழா நடந்தது.

நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில், அஸ்வத்தாமன் இல்ல திருமண விழாவில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைப்பையுடன் ரூ. 10 லட்சம் திருட்டு போயுள்ளது. அஸ்வத்தாமனின் தாயார், விழா மேடையில் வைத்திருந்த கைப்பையை அருகில் கீழே வைத்துவிட்டு, மகள் அணிந்திருந்த நகையை சரிசெய்து விட்டுத் திரும்பிப் பார்த்தபோது கைப்பை காணாமல் போயிருந்துள்ளது.
மணப்பெண்ணின் நகைகளை சரிசெய்து விட்டு திரும்பிய நேரத்திற்குள் யாரோ கைவரிசையை காட்டியுள்ளனர். தனது கைப்பையை காணாததைக் கண்டு அதிர்ந்து போன அஸ்வத்தாமனின் தாயார், உடனடியாக அங்கு பையைத் தேடியுள்ளார். ஆனால், எங்கும் காணவில்லை. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் முன்னணி பிரமுகர்கள் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற திருமண நிகழ்வில், 10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications