சென்னை அருகே குரங்கு கடித்து 2 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே குரங்கு கடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
தாம்பரத்திற்கு அருகேயுள்ளது செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட திருமலை நகர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்து மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. மேலும், வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள உணவுப்பொருள்களை எடுத்துச்சென்றும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் அவைகள் பயமுறுத்தியும் வருகின்றன.
இந்நிலையில் தெருவில் தனியாக வந்த குரங்கு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சனா (5), சிறுமி வாசுகி (13) உள்பட 10 பேரின் உடலில் பல்வேறு பகுதிகளில் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் 10 பேரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.