100 யூனிட் இலவச மின்சார திட்டம் கண்துடைப்பா?: மக்கள் குழப்பம்
நெல்லை: இலவச மின்சார திட்டம் எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரியாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சட்டசபை தேர்தலின்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் 23ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்றதும் முதல் உத்தரவாக மின் கட்டண சலுகைக்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
100 யூனிட் இலவச மின்சார திட்டம் முதல்வர் கையெழுத்து போட்ட நாள் முதலே அமலுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கான மின் கட்டண கணக்கீடு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் பலருக்கும் பழைய கட்டணமே வந்துள்ளது. அதாவது பயன்படுத்திய யூனிட்டுக்கு முழுமையாக கட்ட வேண்டும் என எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
உதாரணமாக 90 யூனிட் பயன்படுத்தியவர்கள் ரூ.70 கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் மக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டால் சரியான பதில் அளிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் இன்னும் வரவில்லை. அது வந்தால் தான் புதிய தி்ட்டத்தின்படி மின் கணக்கீட்டு முறை அமலுக்கு வரும். ஜூன் 7ம் தேதிக்கு முன்பே கணக்கெடுத்தவர்களுக்கு கட்டணத்தில் சலுகை இல்லை. ஆனால் அதன் பிறகு கணக்கெடுத்தவர்களுக்கு குறிப்பிட்ட கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.