1000 லைட்ஸ்; 500 சிசிடிவி; ஹைடெக் பசுமைப் பந்தல்..! விஜய் என்ட்ரி எத்தனை மணிக்கு தெரியுமா?
விக்கிரவாண்டி: வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் எப்போது கலந்து கொள்வார்? எத்தனை மணிக்கு உரையாற்ற இருக்கிறார் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்கள்தான் இடைவெளி இருக்கின்றது. அதற்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க இரவு பகல் பாராமல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மைதானத்தில் சுமார் 1000 ராட்சத மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவை பகலாக்க மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை. மேலும் அதற்கு ஏற்ப ஜெனரேட்டர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு வாயிலில் மட்டும் 2ஆயிரம் வாழை மரங்கள் நடப்பட உள்ளன. அதனுடன் தென்னை மரங்கள், இளநீர் தோரணங்கள் எனப் பல பளபளக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சில சமூக விரோத கும்பல்கள் செயல்படலாம் என விஜய்க்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அப்படி தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதற்காக 500 சிசிடிவி கேமிராக்களை மாநாடு நடைபெறும் மைதானம் முழுக்க பொருத்தி வருகின்றன. வரும் 26 ஆம் தேதி வரை பார்வையாளர்கள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் 80 ஏக்கர் இல்லாமல், வாகனங்களை நிறுத்துவதற்காகத் தனியே 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு காமராஜர், பெரியார், அம்பேத்கர் கட் அவுட் அருகில் விஜய் நிறுத்தப்பட்டுள்ளார். இன்னும் இடம் காலியாக உள்ளது. அங்கே அண்ணாதுரை உள்ளிட்ட தலைவர்களின் கட் அவுட் வர வாய்ப்பு இருக்கிறது. முகப்பு நுழைவாயிலில் அமைக்கப்பட்டு வரும் செட்டில் இரண்டு யானைகள் கால்களைத் தூக்கிக் கொண்டு நிற்பது போலக் காட்சி வரையப்பட்டுள்ளது.
உள்ளே நுழையும்போதே சாலையில் இருபுறங்களிலும் இரும்பு தகடுகளை வைத்து தடுத்துள்ளனர். பக்கவாட்டில் 20 அடி உயரத்தில் மாநாட்டுப் பந்தலைச் சுற்றிய மைதானத்தில் உயரமான கொடிகள் வரிசையாகப் பறக்க விடப்பட்டுள்ளன. இதுமட்டும் இல்லாமல் விஜய் உருவம் பதித்த ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. ரயில்வே தண்டவாளம் பக்கம் யாரும் போகாமல் இருக்க இரும்பு கம்பிகள் மூலம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
மாநாட்டுப் பந்தலில் தொண்டர்கள் அமரும் இடத்தில் வெயிலின் தாக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக 40 ஏக்கர் இடத்தில் முழுக்க கிரீன் மேட் அதாவது பசுமைப் பந்தல் போடப்பட்டும் வருகிறது. இதனால் வெப்பம் தாக்கி யாரும் மயங்கி விழாமல் தடுக்க முடியும். குளுகுளு உணர்வும் ஏற்படும். அதேபோல் மாநாடு பந்தல் மிகப் பெரியது. மேடையில் நடப்பதை அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படாது. அதற்காக அனைத்து இடங்களிலும் எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் அருகில் விஜய்யைப் பார்ப்பதுபோன்ற உணர்வை அடைய முடியும்.

வரும் தொண்டர்களின் குடிநீர்த் தேவைக்காக 300 வாட்டர் டேங்குகள், 300 மொபைல் கழிப்பறைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மெரினா வளாகத்தில் நடந்த விமான சாகசப் பேரணியில் உரிய அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர். சிலர் மரணமடைந்தனர். அதை எல்லாம் அனுபவமாக மனதில் கொண்டு விஜய் மாநாட்டு வசதிகளை மேலும் அதிகரிக்கச் சொல்லி இருக்கிறார்.
இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுதான் ஹைலைட். அவர் கட்சியின் கொள்கை குறித்துப் பேச இருக்கிறார். எதிர்கால திட்டம் பற்றியும் கூறி இருக்கிறார். சுமார் 5 லட்சம் பேர் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. மாநாடு நடக்கும் 27 ஆம் தேதி மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். அதன்பிறகே மாநாட்டுப் பந்தலுக்கு அவர் வருவார். இரவு 7 மணி முதல் 8 வரை விஜய் தனது உரையை நிகழ்த்துவார் என்றும் அதற்கு மேல் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் திரும்பிச் செல்வதற்காக அவகாசம் அளிக்கப்பட்டும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications